2021 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு நான்கு அணிகளுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. கொரோனா 2 ஆம் அலை அதிகரித்ததன் காரணமாக இப்போட்டி இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி நடத்த முடியாத சூழலில் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள வாசிம் அக்ரம் ” 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டை பயமின்றி விளையாடும் அணுகு முறையை கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணியும் கோப்பையை வெல்வதில் முன்னணியில் உள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணி சரியான கலவையை செய்வதற்கு இன்னும் உழைக்க வேண்டும்” என்றார்.
மேலும் “ஒரு பாகிஸ்தான் வீரராக உலக கோப்பையை எங்கள் அணி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி வென்றால் எங்களது கனவுகள் நனவாகும். அவர்கள் சரியான வீரர்கள் கலவையை தேர்வு செய்து விட்டால் சிறந்த அணியை பெற்று கடுமையாக போராட முடியும். பாகிஸ்தான் அணியில் 5 மற்றும் 6-வது வரிசையில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவைகளை செய்தால் பாகிஸ்தானுக்கு வலுவான வாய்ப்புகள் இருக்கும்” என்றார் வாசிம் அக்ரம்.