“கிண்டர் கார்டன் குழந்தைகள் இந்த வருடம் வீட்டிலேயே படிக்கட்டும்!” #SchoolReopen #SurveyResult
By Thagadur
உலகம் முழுக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மாஸ்க், சானிட்டைஸர், சமூக இடைவெளி என்று பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுக்கடங்காமல்தான் இருக்கிறது. அதனால் அரசும் ஜுன் மாதம் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை. இந்த நிலையில் கொரோனாவுடன் வாழப் பழக ஆரம்பித்த பிறகு, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் முதல் மளிகைக்கடைகள்வரை அனைத்தும் லாக்டௌன் தளர்வில் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, பள்ளிகளும் அடுத்தடுத்த மாதங்களில் திறக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன. ‘2020-2021 கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டதால் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும்’ என்று ஒரு தரப்பினர் சொல்ல, ‘வரும் மாதங்களில் கோவிட்-19 உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு பள்ளிகளைத் திறப்பது ஆபத்தானது’ என்ற குரல்களும் எழ ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், ‘ஜூலை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிக்கூடங்களைத் திறந்தால் உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவீர்களா?’ என்று விகடன் இணையதளத்தில் ஒரு சர்வே மேற்கொண்டோம். கூடவே, அது குறித்த வாசகர்களின் கருத்துகளையும் கேட்டிருந்தோம். அவற்றின் தொகுப்பு இங்கே…
இதுதொடர்பாக தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.
‘’மே மாதத்திலிருந்தே தமிழ்நாட்டிலும் சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சென்னையின் பல இடங்கள் ஹாட்ஸ்பாட்டாக இருக்கின்றன. இன்றைக்கு இருக்கிற சூழலில் இன்னும் ஒரு மாதத்துக்குப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதைப் பற்றி யோசிக்கவே கூடாது. வரும் நாள்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலைப் பொறுத்து, ஒரு மாதம் என்பது இரண்டு, மூன்று மாதங்கள் என்றும் ஆகலாம்.
க்ளாஸ் ரூம் என்பது மிகச்சிறிய இடம். மாணவர்கள் நண்பர்களுடன் இருக்கும்போது சமூக இடைவெளியை மறந்துவிடுவார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்தே மருத்துவர்கள் நாங்கள் ஜூன் மற்றும் ஜூலையில்தான் கொரோனா அதன் உச்சத்துக்கு வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் சமூக இடைவெளியைச் சரிவரக் கடைப்பிடிக்கவில்லையென்றால், இந்தக் கால அளவு இன்னமும் நீட்டிக்கவே செய்யும். எனவே, தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறவரை பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே சரி’’ என்கிறார்.