கடவுள் படைத்த பல உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பேச்சித்திறமையை கொடுத்துள்ளார். உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதிற்கு மூல காரணமாய் இருப்பது மொழிகளே.
பல மொழிகளைக் கற்றவனுக்கு மிகுந்த பயன்கள் உண்டாகும். ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிகளை கற்பதற்கு ‘ மொழிப்பெயர்ப்பு’ மிகப்பெரிய பங்காற்றுகிறது.
செப்டெம்பர் 30, உலக மொழிப்பெயர்ப்பு தினமாக அனுசரிக்கப் படுகிறது. துறவி ஜியொர்மே (St Jerome) என்பவர் பைபிலை கிரேக்கத்தில் மொழிபெயர்த்ததின் நினைவாக உலக மொழிப்பெயர்ப்பு நாள் உலக ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்படுகிறது.
தாய்மொழியினைத் தவிர பிற மொழிகளை அறிந்து கொள்வதாலும், கற்றுக்கொள்வதாலும் பல நன்மைகள் ஒருவருக்கு வித்துகின்றன. வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.
ஒரு மொழியினரின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, இலக்கியங்கள் என பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. படிக்கும் கலை வளர்கிறது. கற்பனைத் திறன் வளர்கிறது.
தமிழ்நாட்டில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து, பின்னர் ஆங்கில வழியில் கல்லூரி படிப்பை முடித்தேன் நான்.
பள்ளியில் படித்த போது மாலை வேளையை பயனுள்ளதாக கழிக்க என் பெற்றோர் என்னை இந்தி மொழி கற்க அனுப்பினர். பாட்டு, வயலின் வகுப்புகளில் நான் தேறவில்லை. அதனால் இந்தி வகுப்பு எனக்காக தேர்ந்தெடுக்கப் பட்டது, என் பெற்றோர்களால்.
எப்படியோ ஒருவாராக மூன்று தேர்வுகளை மூன்று வருடத்தில்(!) முடித்தேன். திருமணமாகி மஹாராஷ்டிரா மாநிலத்தில் வர்தாவில் குடிபுகுந்தேன்.
தெரிந்த இந்தியை வைத்து கொஞ்சம், கொஞ்சமாக அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் பழக ஆரம்பித்தேன். மாநில மொழியான மராட்டியும் தற்போது புரிகிறது.
இந்தி, மராட்டியில் உள்ள நூல்களை படிக்கும் வாய்ப்பும் கிட்டியபோது நம் தாயகத்தின் பெருமை புலப்பட்டது. வர்தாவில் இருந்த போது இந்தி, மராட்டி மொழிகளில் வரும் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
குடும்பத்தினர் ஒத்துழைப்புடனும், அலுவல நணபர்களின் வழிகாட்டலுடன், அப்பணியை செவ்வனே செய்ய முடிந்தது. இன்றும், நாக்பூரிலும் என் பணியை தொடர்கிறேன்.
நம் பாரதப் பிரதமர் நம் திருக்குறளில் இருந்து ” நீரின்றி அமையாது உலகு’ என்று தன் சுதந்திர தினப் பேச்சிலும், உலக ஐக்கிய நாடுகளின் சபையில் “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் உயரிய கருத்தை வெளியிட்ட போதும், வேற்று மொழியில் உள்ள நல்லவற்றை அறிய மொழிபெயர்ப்பின் பங்கு புலப்படுகிறது.
மொழிபெயர்ப்பு மூலமாகவே பலவிதமான சீனப் பழமொழிகளையும், ஜப்பான் கதைகளையும் நாம் அறிய முடிகிறது. வேற்று மொழிகளை கற்றுக் கொண்டாலும், நாம் ஒருபோதும் நம் தாய்மொழியை மறக்க மாட்டோம் என்பது திண்ணமே.
அதனால், தமிழர்களான நாம் தமிழ் மொழியின் துணையாடும், இணையோடும், பிற மொழிகளையும் கற்றுக் கொண்டு, நம் தமிழின் பெருமையை ‘மொழிபெயர்ப்பு’ மூலமாக பிற மொழியினர்க்கு எடுத்து செல்வோம் என்று ‘உலக மொழிபெயர்ப்பு நாளன்று’ உறுதிக் கொள்வோம், வாரீர்!!.
இந்தக் கட்டுரையை அனைத்து மொழிப்பெயர்ப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
–ஜெயஸ்ரீ எம் சாரி, நாக்பூர்