தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப் பட்டுள்ள பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்தந்த துறைகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், ரூ.17.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 11 சேமிப்பு கிடங்குகள், 2 மத்திய கூட்டுறவு கிளைக் கட்டங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். #TNGovt
மேலும், நிதித்துறை சார்பில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் ரூ.60.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகத்தினை முதல்வர் திறந்து வைத்தார். #TNGovt
தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் காஞ்சிபுரம் – அச்சிறுபாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (ம) வேலூர் தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.2.09கோடி மதிப்பிலான புதிய உயர்மட்ட பாலங்களையும் திறந்து வைத்தார்.
மேலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கோவை மாவட்டம் ஆனை கட்டியில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஈரோடு பெருந்துறை, காஞ்சிபுரம் செய்யூர், வேலூர் மாவட்டம் நெமிலி மற்றும் ஆம்பூரில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளும் திறந்து வைக்கப்பட்டன.
கடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு மையக் கட்டிடம், தருமபுரி பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.