பராக்கிரமம் மிக்க சித்தப்பா ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று…

November 14, 2021

…அவருடைய பலப்பல சாதனைகளில், பாரதத்தின் வடகிழக்குப் பிராந்தியங்களில் பிரச்சினைகள் தீவிரமடைவதற்கு அவர் ஒரு தனிமனிதனாக ஆழ்ந்து செய்த பரோபகார உதவியும் ஒன்று என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன்.

ஏனெனில், அவர்தாம் உள்துறை அமைச்சகம் அப்பாரதப் பகுதிகளை நிர்வகிப்பதற்குப் பதிலாக, வெளியுறவு அமைச்சகம்தான் அதனைச் செய்யவேண்டும் எனத் தீவிரமாக இருந்தார்; அது மட்டுமல்லாமல் – ஐ ஏ எஸ் அதிகாரிகள் அதனை நிர்வகிக்கக் கூடாது என்பதில் அவர் தடம்புரளாமல் இருந்து, மாறாக ஐஎஃப்ஏஎஸ் (IFAS – Indian Frontier Administrative Service) எனும் இந்திய எல்லைப்பிராந்திய ஆட்சித் துறை எனத் தனியாக ஆரம்பித்து, அதிலும் தண்டக்கருமாந்திர அதிகாரிகளை வைத்து நிரப்பினார். இதன் காரணமாக, முழு பிராந்தியமும் க்றிஸ்தவ மிஷநரிகளின் வாழ்விடமாக, வளர்ந்து சீரழிக்குமிடமாக மாற்ற ஆவன செய்தார்.

(The snippet is from, MKK Nair’s 2014 book: ‘Story of an Era Told Without Ill-will’ that was serialized in a Malayalam magazine earlier & then translated to English)

அதாவது: வசீகர வெர்ரியர் எல்வின் (இவருக்கு ஒருசில போற்றத்தக்க குணங்கள் இருந்திருக்கலாம் என நினைத்தேன் – இருந்தாலும் இவரும் ஒரு மிஷநரிதான்)  அணுகுமுறைகளில் முழு நம்பிக்கையும் வைத்த சாச்சா நேரு அவர்கள், எல்வினின் பரிந்துரைகளை (A Philosophy for NEFA – North East Frontier Agency) முழுவதுமாக ஏற்றார். அப்பகுதிகளுக்குச் செல்ல பாரதக் குடிமக்களாக இருந்தாலும் பர்மிட் ((innerline permit) வாங்கவேண்டும் எனக் கெடுபிடிகள் கொணரப்பட்டன – ஏதோ அது ஒரு தனிப் பிரதேசம்போல! 

சாச்சா நேரு அவர்கள் – நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளுக்கு ஹிந்து ஸாதுக்கள் போவதைத் தடை செய்தார் – மாறாக, க்றிஸ்தவப் பாதிரிகளுக்கு முழு அனுமதி கிடைத்தது.

-0-0-0-0-

…ஒருவேளை சாச்சா நேருவுக்கே – மனதில் அவையெல்லாம் பாரதப் பகுதிகளல்ல என்று தோன்றியிருக்கலாம்.

ஏனெனில் அவருக்குப் ‘பாரதம் என்றால் என்ன’ அதன் உள்ளீடுகளும் ஊற்றுக் கண்களும் யாவை குறித்த புரிதல்களில் பெரும்பிரச்சினைகள் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகவே அவருடைய புத்தகங்களிலும் பேச்சுகளிலும் தெரிகிற விஷயம்தான்.

ஏறத்தாழ அதே காரணத்தால், அவர் நம் ராணுவமானது – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பாரதப் பகுதிகளை (ஜம்மு-கஷ்மீர்) முழுமையாகக் கைப்பற்றவிடாமல் 1949-போர் நிறுத்தக்கோட்டுடன் லூஸ்லவுட்டு – நம் பகுதிகளை பாகிஸ்தானுக்குத் தானம் அளித்திருக்கலாம்.

அதே காரணத்துக்காகத் தான் அவர், கஷ்மீர் ‘பிரச்சினை’யையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றிருக்கலாம்.

பாரதத்தின் மடியில்வந்து வீழவிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பொறுப்பை, அஸால்ட்டாக சீனாவுக்கு பஜனை செய்து தள்ளிவிட்டதும் அதன்காரணமாகவே இருக்கலாம்.

அதே காரணத்தால் தான் அவர், லதாக், அக்ஸய் சின் பகுதிகளிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் சீனா ஆக்கிரமிப்பு செய்தபோது லூஸ்லவுட்டிருக்கலாம்.

(நல்லவேளை – அவர் தொடர்ந்திருந்தால், 1967க்குப் பிறகு திராவிடஸ்தானும் பிரிந்துபோக முழுமனதுடன் இசைந்திருந்திருப்பாரோ என்ன எழவோகோலாகலமோ!)

சாச்சா நேரு அவர்கள் – ஒரு வில்லன், அயோக்கியன் பாரதத்துக்குச் துரோகம் செய்தவர் என்றெல்லாம் சொல்லவரவில்லை – ஏனெனில், ஒரு மகத்தான தியாகியாக, தன்னலம் கருதா சுதந்திரப்போராட்ட வீரராக – தன் மகளான இந்திரா ப்ரியதர்ஷினியையே தனக்குப் பின்னர் ஒரு மாபெரும் தலைவராக உருவெடுப்பதற்கும் குடும்பக்கும்பெனியாக காங்கிரஸை மாற்றியதற்கும் அவர்தாம் சிரமப்பட்டு அடிகோலினார் – இதற்காகவாவது நாம் அவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும்…

… ஆனால் பாருங்கள்… அவர், நம்மெல்லாரையும்போல வெகு சாதாரணர், தந்தையின் அழுத்தத்தாலும் ஸிஃபாரிஷ்களாலும் – அவருடைய அடிப்படைத் தகுதிகளுக்குத் தொடர்பேயில்லாமல் பதவிகளைப் பெற்றவர்.

…ஆங்கிலமயமாக்கப்பட்ட மேட்டுக்குடிப் பழக்கவழக்கங்களை பாரதப் பண்பாடுகளுடன் போட்டுக் குழப்பிக்கொண்டவர், பாபுஜியின் முட்டுக்கொடுத்தல்களால் மேலெழும்பியவர், அரைகுறை ஃபேபியன் ஸோஷலிஸ மாயைகளால் மழுங்கடிக்கப்பட்டவர், ஸ்டாலினையும் ஸோவியத் முன்னேற்ற மாடலையும் காப்பியடித்தவர் – ஆகவே பாரதத்தைத் தன்னால், தான் ஒரு தோற்ற வழக்குரைஞர் எனும் அபூர்வக் காரணத்தால், அறிவியல்பூர்வமாக மேலெழுப்பமுடியும் என பிரமையில் இருந்தவர் – மற்றபடி பெரிதாகக் கல்யாணகுணங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அவருடைய செயல்பாடுகள் அப்படி இருந்தன என இருக்கலாம், பாவம்*.

எது எப்படியோ…

ஆனால் மக்கழே! நேருவிய-சோஷலிஸ்ட்கள் எனச் சொல்லிக்கொண்டு சந்தேகாஸ்பதமாக வளையவரும் கேவலஸ்தர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

*ஐயய்யோ! மன்னிக்கவும்!! அந்தப் ‘பாவம்’ பாரதத்துக்கும் பாரதமக்களுக்கும் எனக் குறிப்பிடப் பட்டிருக்கவேண்டியது! தவறாகப் புரிந்துகொண்டுவிடாதீர்கள், தயைசெய்து…

10 Responses to “பராக்கிரமம் மிக்க சித்தப்பா ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று…”

  1. Ramesh Narayanan Says:

    அஹோ, கேளும் பிள்ளாய், மாமா சித்தப்பாவான சித்திரம் இதோ: 👇
    “பராக்கிரமம் மிக்க சித்தப்பா ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று…14/11/2021”
    👆👌


  2. இப்போதும் மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு செல்ல பெர்மிட் வாங்க வேண்டும் தானே?


  3. இன்னொரு விஷயம் சீனா அக்ஷய் சின் பகுதியை ஆக்ரமித்த பின் பேசிய நேரு அது புல் கூட முளைக்காத தரிசு நிலம் தேவையற்ற நிலம் என்று பேசினார் என நினைக்கிறேன்

    உண்மையிலேயே இந்தியாவினை நேசிக்கும் யாரும் இந்த பூமியை பற்றி இழிவாக பேசமாட்டார்கள் அதுவும் அவரது அலட்சியத்தால் நிலத்தை பறிகொடுத்துவிட்டு


    • சித்தப்பா நேரு, பாவம், அவர் அப்படித்தான்.

      ஆனால் அவருக்கும் க்றிஸ்த்வமயமாக்கலுக்கும் ஸோஷலிஸ சகோதரத்துவத்துக்கும் குடும்பமுறை ஊழல்களுக்கும் ஜால்ரா போட்டு, தொழில்முனைவுகளை முடக்கியதற்கும் ஹிந்துவாழ்க்கை சிதைக்கப்பட்டதற்கும்  காரணம், நம் ஆங்கிலமயமான அதிகாரவர்க்கம்.

      ஆசான் சொல்வது போல இந்த கும்பலையும் ‘நாம் மறந்துவிடலாகாது.’


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...