மோடியின் மலேசிய வருகைக்குப் பி.எஸ்.எம். கண்டனம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகைக்கு, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியதாவது, “அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, தமிழ் நாடு காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 13 அப்பாவி மக்களின் உயிரைப் பலி கொண்டதைப் பி.எஸ்.எம். வன்மையாகக் கண்டிக்கிறது,” என்றார்.

பல ஆண்டுகளாக இந்நிறுவனத்திற்கு எதிரான மக்களின் குரலுக்குத் தமிழ் நாடு அரசும் மத்திய அரசும் செவிசாய்க்காமல்; ஒரு தனியார் முதலாளிக்கு முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளன. இலண்டனில் உள்ள வேதாந்த குழுமம் இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வருகிறது, இதன் தலைவர் அனில் அகர்வால்.

“13 அப்பாவி மக்களின் உயிர் பலிக்குப் பின்னரே, உலகம் இந்தத் தூத்துக்குடி மக்களின் போராட்டத்தைத் திரும்பி பார்க்கிறது. ஆனால், இது 20 ஆண்டுகாலப் பிரச்சனை,” என்று சிவராஜன் செம்பருத்தி.கோம்-இடம் தெரிவித்தார்.

“1992-ல் மகாராஸ்ட்ரா மாநிலத்தில் அந்நிறுவனத்தை அமைக்க முற்பட்டபோது, அம்மாநில மக்களின் கடுமையான எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1994-ல், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு, இந்நிறுவனம் தூத்துக்குடியில் செயல்படத் தொடங்கியது.

“பலமுறை நச்சுப்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, மக்கள் தொடுத்த வழக்கினால், 2008-ல் உயர்நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டது. ஆனால், தனது பணப் பலத்தைக் கொண்டு, இப்பன்னாட்டு காப்பரேட் நிறுவனம், உச்சநீதிமன்றத்தின் துணையோடு, அத்தீர்ப்பை முறியடித்தது. சுற்றுச் சூழல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்கள் யாவும் மக்கள் நலம் காக்க தவறிவிட்டன என்பதனையே இது காட்டுகிறது,” என சிவராஜன் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற இப்போக்கினால், இன்று தூத்துக்குடியில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 15,000 –க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்று திரண்டு நடத்திய இப்போரட்டத்தைக் களைக்க, தமிழ்நாடு காவல்துறை இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீது, திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் சிவராஜன் தெரிவித்தார்.

மக்களின் தொடர் போராட்டத்தினால், கடந்த மே 28-ம் நாள், ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டாலும், இது நிரந்தமானதா என்ற சந்தேகம் மக்களிடையே இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

“அந்த ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இருப்பினும், இது ஒரு நிரந்தர தீர்வைக் கொண்டுவருமா என்ற சந்தேகம் மக்களிடையே இன்னும் உள்ளது. காரணம், இதற்கு முன்னர் இதுபோன்று பலமுறை சீல் வைக்கப்பட்டும், அவ்வாலை செயல்பட்ட வரலாற்றை மக்கள் பார்த்துள்ளனர்.

“மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை அங்கிருந்து வெளியேற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், இச்சம்பவத்துக்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் பி.எஸ்.எம். கேட்டுக்கொள்கிறது.

“பெரும் முதலாளிகளின் சுரண்டலுக்குத் துணையாக நின்று, தன் சொந்த நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல், அவர்களின் உயிரைக் காக்கத் தவறிய இந்தியப் பிரதமர் மோடியின் மலேசிய வருகையைப் பி.எஸ்.எம். கடுமையாக எதிர்க்கிறது,” என்று சிவராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.