‘பாலோ’வின் ஹராப்பான் வேட்பாளர் ஷேக் ஓமார், டிஏபி அறிவித்தது

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் பாலோ சட்டமன்ற வேட்பாளராக, தனது விளம்பரப் பிரிவு துணைச் செயலாளர் ஷேக் ஓமார் அலியை டிஏபி அறிவித்தது.

டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், ஜொகூர் பாலோவில், நேற்று மாலை டிஏபி தேர்தல் இயக்க அறையைத் தொடக்கி வைத்தபோது, இதனை அறிவித்தார்.

“பாலோவில் டிஏபி-ஹாராப்பான் இயக்க அறை திறப்பு நிகழ்ச்சி ஓர் அடையாளமாகவும், அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. காரணம், தீக்கிரையாகி 20 வருடங்களாக கைவிடப்பட்ட ஒரு கடை-வீட்டை, டிஏபி பாலோ மறுசீரமைத்து, தேர்தல் மாற்றத்திற்காக- பாலோவிற்கு மட்டுமல்ல, மாறாக ஜொகூர் மாநிலத்திற்கும் மலேசிய நாட்டிற்குமான ஓர் அரசியல் மாற்றத்திற்கான செயல்பாட்டு இடமாக தேர்ந்தெடுத்துள்ளது,” என்று கேலாங் பாத்தா எம்பி-யுமான லிம் தனதுரையில் கூறினார்.

மேலும், தேர்தல் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்ட போதும், அம்னோவின் கோட்டையாக இருக்கும் ஜொகூரைக் கைப்பற்றும் முயற்சிகளில் வெற்றி பெற முடியும் என்று லிம் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட, டிஏபி அறிவித்த முதல் மலாய்க்கார வேட்பாளர் ஷேக் ஒமார் ஆவார்.