பொதுவாக தமிழ் நடை என் கண்ணில் படுவதே இல்லை. யாருடைய நடை கண்ணில் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், பாரதியின் நடையில் இன்றும் புத்துணர்ச்சி தெரிகிறது; கல்கியின் நடை சரளமாக இருக்கிறது, கலைஞரின் வலிந்து புகுத்தப்பட்ட செயற்கையான அலங்காரத் தமிழ் நடை கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது, ரா.பி. சேதுப்பிள்ளையின் நடையில் வேகம் தெரிகிறது, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா ஆகியோரின் நடை சுகமானது, சுஜாதாவின் நடையில் நவீனமாக இருக்கிறது. என்று தோன்றுகிறது. சர்மா திரு.வி.க.வின் சீடர். பிள்ளை, சர்மா, திரு.வி.க. மூவரும் இலக்கண சுத்தமான தமிழில்தான் எழுதுவார்கள், இருந்தாலும் சுலபமாகப் படிக்க முடியும்.
பள்ளியில் திரு.வி.க.வின் ஏதோ ஒரு கட்டுரை பாடமாக இருந்தது. “நம் தென்னாட்டவர்க்கு புளி காரப்பித்து என்றுதான் போகுமோ என்று அறிகிலேன்!” என்ற பாணியில் இருந்தது. ஆனால் செயற்கைத்தனம் அற்ற எழுத்து. அந்தக் கட்டுரையைப் படித்தபோது என்றாவது இவர் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது இன்னும் நினைவிருக்கிறது.
திரு.வி.க.வின் நடை எங்கே ஆரம்பித்தது, எப்படி பரிணமித்தது என்பதைக் காண அவர் 1908-இல் எழுதிய கதிரைவேற்பிள்ளை சரித்திரத்தை புரட்டிப் பார்க்கலாம். சரியான பண்டித நடை. பத்து பனிரண்டு வருஷத்தில் அதை மாற்றிக் கொண்டார். சாமிநாத சர்மா திரு.வி.க.வின் கீழ் துணை ஆசிரியராக பணியாற்றிய 1920 வாக்கிலேயே இதெல்லாம் மாறிவிட்டது என்று தகவல் தருகிறார்.
திரு.வி.க.வை சுப்ரமணிய சிவா விளக்கெண்ணய் முதலியார் என்றே அழைப்பாராம். அவரால் கடிந்து பேசவே முடியாதாம். ஆனால் நோயால் அவதிப்பட்ட சிவாவுக்கும் ஐந்து பத்து கொடுத்து உதவுவாராம்.
திரு.வி.க. பல தளங்களில் முன்னோடி. முன்னோடி பத்திரிகையாளர். தொழிலாளர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். காங்கிரஸில் செயலாக இருந்தவர். நாயுடு-நாயக்கர்-முதலியார் (வரதராஜுலு நாயுடு, ஈ.வெ. ராமசாமி நாயக்கர், கல்யாணசுந்தர முதலியார்) மூவரும்தான் தமிழ்நாட்டில் காங்கிரசை பரப்பினார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தின் மீதுதான் ராஜாஜி கட்டிடத்தை எழுப்பினாராம். மூவருமே காங்கிரஸிலிருந்து முழுதாகவோ, அரை மனதாகவோ விலகியது துரதிருஷ்டம்தான். காந்தி மீது அவருக்கு இருந்த மரியாதை மாறவே இல்லை என்றாலும் காங்கிரஸ் படேல் “கோஷ்டியால்” கட்டுப்படுத்தப்படுகிறது, 1937-இன் காங்கிரஸ் மந்திரி சபைகள் வாய்ப்பை வீணடித்தன, குறிப்பாக படேல் தொழிலாளர் நலத்துக்கு எதிரானவர் என்று எண்ணி இருக்கிறார். (இந்தியாவும் விடுதலையும் புத்தகம்).
காலம் முழுதும் மனதளவில் காங்கிரஸ்காரரே. ஆனால் அவரை சிறை செய்தது ஓமந்தூரார் அரசு மட்டுமே – ஏதோ தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்காக. அன்றைய தொழில் மந்திரி டி.எஸ்.எஸ். ராஜன் கூட்டம் நடத்த விடமாட்டேன் என்று மிரட்டியே இருக்கிறார், இவர் மசியவில்லை.
ராஜாஜி திறமையாக அரசியல் செய்து திரு.வி.க.வை ஓரம் கட்டினார் என்று அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய சக்திதாசன் சொல்கிறார். குறிப்பாக உப்பு சத்தியாக்கிரகத்தின்போது ராஜாஜி திரு.வி.க.வை இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார். ராஜாஜி சிறை சென்றதும் அடுத்தபடி பிரபலமான தலைவரான இவர் தமிழகத்தில் தலைமை தாங்க, சிதம்பரம் அருகே உப்பெடுக்க, தயாராக இருந்தாராம். ஆனால் ராஜாஜி இவர் வெளிச்சம் பெறக்கூடாது என்பதற்காகவே கே. சந்தானத்தை அடுத்த தலைவராக அறிவித்தாராம்.
சக்திதாசன் எழுதிய திரு.வி.க.: வாழ்வும் தொண்டும் (1982) புத்தகம் genuine ஆனது. சக்திதாசன் திரு.வி.க.வோடு நெருங்கி பழகியவர். நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். அவருக்கு திரு.வி.க. ஏறக்குறைய தெய்வம், அவரால் திரு.வி.க.வை குறை சொல்லிவிட முடியாது என்றாலும் கூட, இது மிகவும் உண்மையான புத்தகம். சக்திதாசன் சொல்வதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். ராஜாஜி திரு.வி.க.வை மட்டுமல்ல, சத்தியமூர்த்தியையும் ஓரம் கட்டினார் என்பது வரலாறு.
சக்திதாசன் திரு.வி.க.விடம் சேர்ந்ததே சுவாரசியம். அவர் சிறு வயதில் திரு.வி.க.வின் புத்தகம் ஒன்றைப் படித்திருக்கிறார், மயங்கிப் போயிருக்கிறார். நவசக்தி பத்திரிகையில் திரு.வி.க.வின் உதவி ஆசிரியராக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தபோது என்ன சம்பளம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சேர்ந்து கொண்டிருக்கிறார். திரு.வி.க.வின் தத்துப்பிள்ளை என்றே அறியப்பட்டிருக்கிறார். நவசக்தியின் ஆசிரியராகவும் பின்னாளில் பணியாற்றி இருக்கிறார்.
தேசபக்தன், நவசக்தி இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். சாமிநாத சர்மா, சக்திதாசன், கல்கி ஆகியோர் உதவி ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.
திரு.வி.க. பக்தரும் கூட. ராயப்பேட்டையில் வாழ்ந்தவர். எங்கள் சென்னை வீட்டிலிருந்து பத்தடி தூரத்தில் அவர் நிறுவிய குகானந்த நிலைய மண்டபம் இன்னும் இருக்கிறது (டிடிகே ரோடு மற்றும் அவ்வை ஷண்முகம் ரோடு சந்திப்பிற்கு அருகே). இறைவனே இயற்கை, இயற்கையோடு ஒத்து வாழ்வதே இன்பம் என்றெல்லாம் இன்ப வாழ்வு என்ற சிறு புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
காந்தி மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அவருக்கு ரோல் மாடல்கள் இருந்தார்கள் என்றால் அதில் காந்தியும் இருந்திருப்பார். மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் புத்தகத்தில் அவருக்கு காந்தி மேல் இருந்த மரியாதை, அன்பு, பிரமிப்பு எல்லாம் நன்றாக வெளிப்படுகிறது. காந்தியோடு வேறுபட்டுமிருக்கிறார் – குறிப்பாக காந்தி பிறப்பு அடிப்படையிலான வர்ணாசிரம தர்மத்தை ஆதரிப்பதின் (பின்னால் காந்தியின் நிலை மாறியது) நுட்பம் புரியவில்லை, இது சரியல்ல என்கிறார். ஆனால் காலப்போக்கில் காங்கிரஸ் மீது கொஞ்சம் கசப்பு உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் ஃபாசிசம், திராவிட நாடு உருவாகும் என்றெல்லாம் நாற்பதுகளில் நினைத்திருக்கிறார், சொற்பொழிவாற்றி இருக்கிறார்.
எந்த அரசியல் அமைப்பிலும் இருக்கக் கூடிய சிறு தவறுகள் அவரை பெரிதாகப் புண்படுத்தி இருக்கின்றன. ஸ்வராஜ்யக் கட்சி ஆட்சி அமைக்காது என்று சொன்னதை நம்பி நிறைய பிரச்சாரம் செய்திருக்கிறார். ஆனால் சீனிவாச ஐயங்கார் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க சுயேச்சைகளுக்கு ஆதரவு தந்தாலும் தரலாம், அதன் மூலம் மறைமுகமாக ஆட்சியில் பங்கேற்க நேரிடலாம் என்று யோசிப்பது தெரிந்தும் ஏமாற்றம் அடைந்து பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதை நிறுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் திரு.வி.க.வுக்கு சீனிவாச ஐயங்கார் பொருளாதார ரீதியாக உதவி இருக்கிறார். (இவர் சத்தியமூர்த்திக்கும் உதவினார்). ஆனால் திரு.வி.க. பெற்றுக் கொண்டது கொஞ்சம்தான் என்று தோன்றுகிறது. வீடு வாங்கித் தருகிறேன் என்று சொன்னதை மறுத்துவிட்டாராம்.
காங்கிரசின் கோஷ்டி மோதலில் காலையில் அறிவிக்கப்பட்ட ஜில்லா மெம்பர் வேட்பாளர் (முனுசாமி முதலியாராம்) மாலையில் மாற்றப்பட்டதைக் கண்டு சினம் கொண்டிருக்கிறார். ஊழல் என்று முதலில் அறிவிக்கப்பட்டவரை ஆதரித்து அவரை ஜெயிக்க வைத்திருக்கிறார். ராஜாஜியையே இப்படி மாற்றம் நடந்தது தவறுதான் என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார். ஆனால் இப்படி நடந்த நிகழ்ச்சிகள் அவருக்கு பதவி அரசியலில் கொஞ்சம் கசப்பை உருவாக்கி இருக்கின்றன.
தீவிர சைவர். ஆலமும் அமுதமும் போன்ற புத்தகங்கள் (அவரது உரை ஒன்று புத்தகமாக வந்திருக்கிறது) அவரது இந்தப் பக்கத்தைக் காட்டுகின்றன.
ஏசு கிறிஸ்து திரு.வி.க. போன்றவர்களுக்கு ஒரு பிம்பம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டச் சொன்ன கிறிஸ்துவைத்தான் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்துவின் அருள் வேட்டல் போன்ற துதிப்புத்தகத்தைப் பார்த்தால் ஹிந்துத்துவர்களுக்கு அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் வரும்.
தமிழ் நூல்களில் பௌத்தம் போன்ற சிறு புத்தகங்கள் அவரது தமிழ்ப் புலமையை நன்கு வெளிக்காட்டுகின்றன. திரு.வி.க. சைவத்தில் அதிக நாட்டம் கொண்டவர். வன்முறையை வெறுப்பவர். அவர் ஞானசம்பந்தர் பௌத்தம் புத்தர் காலத்திலிருந்து மிகவும் மாறிவிட்டது, இருந்தாலும் ஞானசம்பந்தர் பௌத்தத்தை எதிரியாக கருதவில்லை, ஜைனர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை என்று வாதிடுவது ரசிக்கும்படியாக இருந்தது.
நாயன்மார் திறம் போன்ற சிறு அறிமுக நூல்கள் எனக்கே தேவாரத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கின.
பெண்ணின் பெருமை போன்றவை எனக்கான புத்தகங்கள் அல்ல.
அவரது வாழ்க்கைக் குறிப்புக்கள் புத்தகம் சிறப்பான சுயவாழ்க்கை வரலாறு. சாரு நிவேதிதா அந்தப் புத்தகத்தைப் பற்றி நல்ல குறிப்பு ஒன்றை எழுதி இருக்கிறார். என்றாவது நானும் விரிவாக எழுத வேண்டும்.
அவரது மனைவி கமலாம்பிகையோடு அவருக்கு இருந்த பந்தம் அழகான காதல் கதை. கமலாம்பிகை பெரிய இடத்துப் பெண். இவரிடம் எனக்கு நகையும் உயர்ந்த் துணிகளும் வேண்டியது பிறந்த வீட்டிலிருந்து வந்திருக்கிறது, எனக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் என்று மணமான புதிதில் கேட்டிருக்கிறார். திரு.வி.க. போன்ற மனநிலை உடைய ஒருவரிடம் இப்படிக் கேட்டால் அவர் காதல் வசப்படுவதில் வியப்பென்ன? அந்தக் கால கூட்டுக் குடும்பத்தில் மனைவியிடம் அதிக நேரம் பேச முடியவில்லை, அதனால் இலக்கியம் கற்றுத் தர முடியவில்லை, தனிக்குடித்தனம் போய்விடலாம் என்று திரு.வி.க. எண்ணி இருக்கிறார். கமலாம்பிகை மறுத்துவிட்டார். பிறகு ஏதோ சொந்தக்காரர் வீட்டுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு அவர் வீட்டில் வாராவாரம் போய் ஒரு நாள் தங்குவார்களாம். அங்கேதான் பாடம் சொல்வதெல்லாம்.
கமலாம்பிகை எலும்புருக்கி நோயால் மணமான ஆறு ஆண்டுகளில் இறந்துவிட்டார். குழந்தைகளும் இறந்துவிட்டன. திரு.வி.க. மறுமணம் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை…
திரு.வி.க. எந்த விதமான பதவியும் பெற்றவர் அல்லர். பணம், பதவிக்காக அவர் முயன்றதே இல்லை. அவரை சக்திதாசன் அந்தணர் என்று அழைக்கிறார். “அந்தணர் என்போர் அறவோர்” என்பதுதான் வரையறை என்றால் அவர் அந்தணரே! சாமிநாத சர்மாவின் கண்ணில் அவர் சீலர். அந்தணர் என்பதை விட சீலர் என்பது அவருக்கு மிகப் பொருத்தம்.
என் கண்ணில் அவரது பத்திரிகைப் பணி, தொழிலாளர் இயக்கங்களை கட்டி எழுப்பியதில் அவரது பங்கு, ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் காங்கிரசை கட்டி எழுப்புவதில் அவரது பங்கு அத்தனையும் inspiration!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், தமிழறிஞர்கள்
பயன்படுத்திய புத்தகங்கள்: