ஏப்பம் ஏற்படுவது ஏன்?

புளி ஏப்பம், ஒரு முக்கியமான பிரச்னை. நாம் சாப்பிடும் உணவு வாயிலிருந்து உணவுக் குழாய்க்கு போய், இரைப்பையை அடையும்போது, இந்த இரண்டு உறுப்புகளுக்கும் இடையே உள்ள வால்வு திறக்கிறது.

உணவு இரைப்பைக்குள் சென்றவுடன், இந்த வால்வு மூடுகிறது. சில சமயம் இந்த வால்வு மூடாமல் இருந்தால், ஏப்பம் வருகிறது.

ஏனெனில் இந்த வால்வு மார்பு மற்றும் வயிற்றை பிரிக்கும் உதரவிதானப் பகுதியில் உள்ளது. உதரவிதானத்தின் மேற்பகுதியில் குறைந்த அழுத்தம் ஏற்பட்டு, இந்த வால்வு சரியாக மூடாமல் இருந்தால் அதிக அழுத்தப் பகுதியான இரைப்பையினுள் இருக்கும் அமிலத்துடன் கலந்த உணவு, அந்த வால்வு வழியாக குறைந்த அழுத்தப் பகுதியான உணவுக் குழாயை அடைகின்றன.

இந்த அமிலத்துடன் கலந்த உணவை உணவுக்குழாயில் தாங்க முடியாமல், “புளிச்ச ஏப்பம்’ என்ற பிரச்னையை நோயாளி உணர்கிறார்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவுக் குழாய் மற்றும் இரைப்பைக்கு இடையே இருக்கும் வால்வு பிறவியிலேயே மார்பு பகுதியில் இருந்தால் இந்தப் பிரச்னை வரலாம்.

ஆனால் வேறு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன உளைச்சல் மற்றும் பிரச்னை மிகவும் முக்கியமானது. எண்ணெய், பொரித்த உணவுகள் உண்பதால் இந்த பிரச்னைகள் வரலாம்.

மேலும் மதுப் பழக்கம், புகைப் பழக்கம், அதிக காபி மற்றும் டீ உண்பதாலும், ஐஸ்கிரீம் மற்றும் மிட்டாய் வகைகள் உண்பதாலும் இந்த பிரச்னைகள் வரலாம்.

எனவே அதிக புளி ஏப்பம் வருபவர்கள் அதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, ஏப்பம் மீண்டும் வருவதை தடுத்து விடலாம்.

ஆனால் தொடர்ந்து புளி ஏப்பம் இருந்தால், தேவையான பரிசோதனைகள் செய்து மாத்திரைகள் சாப்பிட வேண்டி இருக்கலாம். சில சமயங்களில் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.