பள்ளி மாணவி செம்பருத்தி ‘ஐ.பி.எஸ்.’ கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ.!

2013 ஆகஸ்ட்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம் கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறினார் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர்.

“சார்…” – ஒரு சிறு குரல்.

திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள்.

“என்னம்மா?” என்றார்.

“லைப்ரரியை திறக்க மாட்டேங்கறாங்க சார்.”

காரை விட்டு இறங்கிவிட்டார்: “ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா?”

“அது தெரியலிங்க சார்.”

சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டார்: “என்ன காரணம் தெரியுமா?”

அவர்களுக்கு லைப்ரரி என்ற ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.

சிறுமியிடமே திரும்பினார்: “சாவி யாருகிட்டம்மா இருக்கு?”

“அது யாரோ வெளியூர் ஆள்கிட்ட இருக்குதாம் சார்.”

“எந்த கட்டிடத்தில் இருக்கு?”

“ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பின்னாடி இருக்கு சார்.”

“சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா.” காரில் ஏறினார்: “எங்கம்மா படிக்கிற?”

“பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்.”

“எத்தனாவதும்மா?”

“எட்டாவது சார்.”

“பேர் என்னம்மா?”

“செம்பருத்தி சார்.”

அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்துவிட்டு கார் ஏற வருகையில், மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார்.

“எதுக்கும்மா?”

“நாளைக்கு எனக்கு பிறந்த நாள் சார்.”

“மகிழ்ச்சிம்மா. நல்லா படி.” வாழ்த்தினார்.

“சார் லைப்ரரிய மறந்துடாதீங்க.”

                                  # # #

ஊராட்சி மன்றத் தலைவரை எம்.எல்.ஏ. தொடர்புகொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது. வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.

நூலகக் கட்டிடம் அமைக்க, எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கினார்.

அங்கு இருந்த நூலகம், பகுதி நேர நூலகம் என்பதால் ஒதுக்கிய நிதி திரும்பி வந்தது.

மீண்டும் அதற்கு புதிய தலைப்பு “படிப்பகம்” என்று வைத்து அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கினார்.

கட்டிடம் கட்டி முடித்த உடன் திறப்பு விழாவிற்கு செம்பருத்தியை அழைக்கச் சொன்னார்.

                                   # # #

இன்று (28-2-2016) திறப்பு விழா.

வரவேற்பு பதாகையில் செம்பருத்தி புகைப்படம்.

கல்வெட்டில் செம்பருத்தி பெயர் திறப்பாளர்.

செம்பருத்தி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

எம்.எல்.ஏ. உள்ளிட்ட  அனைவரும் உரையாற்றிய பிறகு, செம்பருத்தி இறுதியில், நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

இன்று செம்பருத்தி தான் வி.ஐ.பி.

எம்.எல்.ஏ. பின்னாளில் கல்விக்கு உதவுவதற்கு அலைபேசி எண் கேட்ட உடன் எழுதிக் கொடுத்தார்: “செம்பருத்தி IPS “.

நூலகம் கேட்டபோது இருந்த அதே உறுதி.

நிச்சயம் ஆவார்.

“உதவுவேன்” என்றார் எம்.எல்.ஏ.

                         # # #

 பாராட்டுக்கள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர்!

சல்யூட் செம்பருத்தி ஐ.பி.எஸ்!

0a1d