ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்! கடலூரில் சீமான் போட்டி!

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார். “புயல், வெள்ளம், சுனாமி என இயற்கைப் பேரிடரால் பல முறை பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்துக்கு பணியாற்றுவதற்காகவே நான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சீமான் மேலும் பேசுகையில், “தமிழர்கள் பிரிந்து நிற்பதால் நன்மை இல்லை. தமிழர்கள் ஜாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழர்களாக இணைய வேண்டும்.

“திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என்ற நிலையை மாற்றுவோம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும். எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராகி விட்டது. மாற்றம் கொடுப்போம். செயலில் காட்டுவோம்.

“ஆண்களுக்கு பெண்கள் சமம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 42 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவோம்.

புதுச்சேரியிலும், காரைக்காலிலும் தனித்தே போட்டியிடுவோம். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை பிப்ரவரிக்குள் அறிவிப்போம்” என்றார்.

43