“இந்துமதவாதியான மு.க.ஸ்டாலினுடன் பாஜக கூட்டணி”: சு.சுவாமி வியூகம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் கூட்டணி அமைக்க நேரடியாகவும், மறைமுகமாவும் பல்வேறு கட்சிகள் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழின விரோதியும், இந்துத்துவவாதியும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராகவும், திமுக தலைவராகவும் கருணாநிதி அறிவித்தால் பாஜக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கொண்ட புதிய அணி உருவாகும்’ என கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிரானவர். ஆனால், அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின், மனைவியுடன் வெளிப்படையாகவே கோயிலுக்குச் செல்பவர். திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவினர் ஸ்டாலின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளனர்.

எனவே, இனியும் தாமதிக்காமல் ஸ்டாலினை கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.

எனவே, திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் திமுக – தேமுதிக – பாஜக கூட்டணி ஏற்படும். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித்ஷாவிடம் பேசினேன். தமிழகத்தில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு திமுக – தேமுதிக – பாஜக கூட்டணி அமைய வேண்டும். இதற்காக தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வேன்.

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படும் என்ற தகவல் கற்பனையானது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.