ஆஹா தமிழ் ஓடிடி தளம் துவக்க விழா: பிரபலங்கள் நேரில் வாழ்த்து

தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமாக பல்லாண்டுகளாக கோலோச்சும் ஆஹா நிறுவனம் அடுத்தகட்டமாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது. இதன் துவக்க  விழா சென்னையில் தனியார் அரங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

0a1h

இவ்விழாவினில் தயாரிப்பாளர்  கலைப்புலி தாணு  பேசுகையில், “அல்லு அர்விந்த்தை மீண்டும் ஆஹா மூலம் தமிழுக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. 30 வருடங்களுக்கு மேலாக, ரஜினி நடித்த ’மாப்பிள்ளை’ பட காலம் முதல் அல்லு அரவிந்த் உடன் எனக்கு நட்பு உள்ளது. அவரது குணமும் நேர்மையும் மெச்சத்தக்கது. அவரது கணக்குகள் என்றுமே தப்பாக போனதில்லை. இந்த புதிய பயணம் அவருக்கு பெரும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.

வந்திருந்த விருந்தினர்கள்  அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தபின்,  தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் பேசுகையில், “20 வருடங்களுக்கு முன்னால் இங்கிருந்து போய் விட்டேன்,  இங்கே தான் படித்தேன். இங்கேதான் வாழ்ந்தேன், இப்போது மீண்டும் வீட்டுக்கு திரும்பிய உணர்வு இருக்கிறது. 23 வயதிலேயே தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். இந்த வெற்றிப்பயணம் உங்களால் நடந்தது. ஒரு நாள் இரவு ஆரம்பித்து, நடுநிசி 2 மணி வரை நெட்பிளிக்ஸில் ஒரு தொடர் பார்த்தேன் என்னை உள்ளே அப்படியே இழுத்துகொண்டது.  எழுந்து ரூமை விட்டு வந்தால், அல்லு அர்ஜீனும் நெட்பிளிக்ஸ் பார்த்துவிட்டு உலாவிக் கொண்டிருந்தார். அவர் வயது முதல் என் வயது வரை எல்லோரையும் ஈர்க்கும் சக்தி,  இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு இருக்கிறது என தெரிந்தது. அப்போது தான் இந்த தளத்தை ஆரம்பிக்கும் ஐடியா வந்தது. இந்த தளம் அனைவரையும் ஈர்க்குமென நம்புகிறேன். நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசுகையில், “அல்லு அர்விந்த் எதை தொட்டாலும் பொன்னாகும். அவர் எதில் கை வைத்தாலும் அதில் லாபம் பார்த்துவிடுவார்.  இந்த புதிய துறையிலும் அவர் வெற்றி பெறுவார் .வாழ்த்துக்கள்” என்றார்.

கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், “ஓடிடி தளம் என்பது சிறு தயாரிப்பாளர்களுக்கு வரம். அல்லு அர்விந்த் எல்லா விசயத்திலும் கணக்கு போட்டு ஜெயிப்பார். இந்த ஆஹா ஓடிடி பயணமும் அவருக்கு வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். முன்பெல்லாம் படங்கள் ரிலீஸான பின்னாடி, இரண்டவது மூன்றாவது ரிலீஸ் என சின்ன தியேட்டர்களில் ஓடும். ஆனால் இப்போது அது ஓடிடிக்கு சென்றுவிட்டது.  அந்த துறையில் அல்லு அர்விந்த் சார் நுழைந்திருப்பது மகிழ்ச்சி அவருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் இயக்குநர் ரஞ்சித் பேசுகையில், “இது மிக அருமையான தருணம். ரைட்டர் படத்தை, தமிழில் கால்பதிக்கும் ஆஹா மிகப்பெரிய வெளியீடாக அனைவருக்கும் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி. சிறு படங்களுக்கான தியேட்டர் ரிலீஸ் இங்கு சிக்கலாக உள்ளது. இப்போது ஒடிடி தளங்களிலும் சிறு பட்ஜெட் படங்களை வாங்குவதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. தமிழில் வரும் ஆஹா நிறுவனம் சிறு படங்களுக்கு ஆதரவு தருமென நம்புகிறேன் நன்றி” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் அனிருத்  இணைந்து ஆஹா தளத்தின் லோகோவை அறிமுகம் செய்தனர்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “தமிழை மட்டுமே நோக்கமாக கொண்டு ஒரு ஓடிடி தளமாக ஆஹா வந்திருப்பது மகிழ்ச்சி. நிறைய ஓடிடி தளங்கள் வந்தபின் எதைப்பார்ப்பது என்பதில் நிறைய தடுமாற்றங்கள் வந்துள்ளது. அதை தீர்க்கும் விதமாக ஆஹா இருக்குமென நம்புகிறேன். அல்லு சாரை எனது சிறு வயதில் இருந்து தெரியும். அவர் மெட்ராஸ் பாய்.  அவர் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “ஆஹா உடன் எனக்கு ஒரு சிறு தொடர்பு விரைவில் உருவாகவுள்ளது. அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். ஆஹா குடும்பத்துடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி ஆஹா மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் கவின் பேசுகையில், “ஆஹா தமிழ் நிறுவனத்தில் எங்களை மிகப்பெரும் லாஞ்சாக, ஆகாஷ் வாணி வெப் தொடர் மூலம் அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரும் நன்றி. நான் அல்லு சாரிடம் பேசுவதற்காக தெலுங்கு வார்த்தை எல்லாம் கற்றுக்கொண்டு வந்தேன், ஆனால் அவருக்கு தமிழ் தெரியும் என யாரும் சொல்லவில்லை. அல்லு அர்ஜூனுக்கு நான் மிகப்பெரும் ரசிகன். ஆஹா தமிழில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “தமிழில் ஆஹா நிறுவனத்தை ஆரம்பிக்கும் அல்லு அர்விந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது ஓடிடி பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லு அர்விந்த் அவர் இருக்கும் உயரத்திற்கு,  அவர் சிரஞ்சீவியை வைத்து படம் செய்தபோது இந்தக்கதையை கேட்டு கொஞ்சம் ஓகேவா என சொல்லுங்கள் என்றார்.  அத்தனை எளிமையானவர், ஈகோ இல்லாத மனிதர். அவர் ஆரம்பித்திருக்கும் ஆஹா இங்கும் மிகப்பெரிய வெற்றியை பெறும் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை குஷ்பு  பேசுகையில், “நாங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தபோது  அல்லு அர்விந்த் சாரை தான் ரோல் மாடலாக வைத்துக்கொண்டோம். ஒரு படம் ஆரம்பிக்கும்போதே, அது எவ்வளவு சம்பாதிக்குமென திட்டமிடுவார். அவர் 29 வருடத்திற்கு பின் தமிழுக்கு வந்ததாக சொன்னார். தமிழ் மண்ணுக்கு உள்ள குணம் அப்படி. இங்கிருந்து எங்கு போனாலும் மீண்டும் அழைத்து வந்துவிடும். ஓடிடி  தான் உலகம் முழுக்க இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஓடிடி புதிய கதைகளுக்கான தளமாக இருக்கிறது. தமிழில் ஆஹா முக்கியமான தளமாக இருக்கும். அல்லு அர்விந்த் எப்போதும் மாறாமல் அப்படியே எளிமையாக இருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

சிறுத்தை சிவா பேசுகையில், “அல்லு அர்விந்த் சார் மிகப்பெரிய பெர்பக்சனிஸ்ட். அவரது உழைப்பு எனக்கு தெரியும். அவர் ஆரம்பித்திருக்கும் ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “ஆஹா 100 சதவீதம் தமிழ். மிகப்பெரும் வெற்றி அடையும். தமிழ் துறையை வளர்க்க அல்லு அர்விந்த் சார் பெரிய அளவில் முன்னெடுப்பது மகிழ்ச்சி. நாங்கள் இரை எனும் வெப் தொடரை  சமூக கருத்துடன்  எடுத்துள்ளோம். கமல் சார் வாழ்த்தினார். ராஜேஷ் மிக நன்றாக இயக்கியுள்ளார். இது அனைவரையும் ஈர்க்கும் படைப்பாக இருக்கும்” என்றார்.

நடிகை ராதிகா பேசுகையில், “அல்லு அர்விந்திற்கு என் வாழ்த்துக்கள். தமிழர்களுக்காக தமிழுக்காக பெரிய முயற்சி எடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றி. இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. இதை அனைத்து மொழிகளிலும் முன்னெடுக்க உள்ளீர்கள் என தெரியும், அனைத்திலும் இது மிகப்பெரும் வெற்றி பெறும். இதில் நாங்கள் ஒரு வெப் தொடர் எடுத்துள்ளோம். பேட்ஸ் ஆஃப் பிரே நாவலை தழுவி எடுத்திருக்கிறோம். இந்தக் கதையை கேட்டவுடன் அவர் இதை செய்யலாம் என சொன்னார். இதில் வேலை செய்த என் ஹீரோ மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்றார்.

RJ பாலாஜி பேசுகையில், “ஓடிடியை ஒரு வருடம் முன்பு சினிமாவுக்கு காம்படிசன் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது எல்லோரும் அங்கு தான் செல்கிறார்கள். தமிழ் திரையுலகில் நிறைய இளம் திறமையாளர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஆஹா வாய்ப்பு தர வேண்டும்.  ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசுகையில், “அல்லு அர்விந்த் சார் பற்றி நிறைய கேள்விப்பட்டிருகிறேன். லாக்டவுன் நேரத்தில் முடிவெடுத்து இதை இப்போது சாத்தியபடுத்திக் காட்டியிருக்கிறார். ஆஹா தமிழில் மிகப் பெரிதாக வளர வேண்டும். வாழ்த்துக்கள் நன்றி” என்றார்.

நடிகர் அசோக்செல்வன் பேசுகையில், “சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை ஆஹா மூலம் உலகம் முழுதும் உள்ளவர்கள் பார்ப்பார்கள் என நம்புகிறேன். புதிய முயற்சியாக உருவாகியுள்ள ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில், “அல்லு அர்விந்த் சார் எது தொட்டாலும் வெற்றி பெறும். மூன்று பெரிய ஸ்டாரை உருவாக்கியுள்ளார். அவர் சாதனைகள் பெரிது. அவருடன் வேலை செய்பவர்களை அவ்வளவு நன்றாக பார்த்துகொள்வார். கலைக்காக அவர் தரும் மரியாதையும், உழைப்பும் பெரிது. தமிழில் இன்று வரும் படங்கள் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் நம்பி தான் இருக்கிறது அந்த வகையில் புதிதாக அறிமுகம் ஆகும் ஆஹா பெரிய வெற்றி பெறும்” என்றார்.

நடிகை நிக்கி கல்ராணி பேசுகையில், “என்னுடைய முதல் படத்தில் கீதா ஆர்ட்ஸ் இருந்தது. எனது திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தது அவர்கள் தான். ஆஹா தெலுங்கை பார்த்தபோது, தமிழுக்கும் இப்படியொரு தளம் எப்போது  வருமென நினைத்தேன். இப்பொழுது ஆஹா வந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி பேசுகையில், “எங்கள் ரமணி Vs ரமணி நிகழ்ச்சி மீண்டும் ஆஹா மூலம் வருவது மகிழ்ச்சி. இந்த லாக்டவுனில் எல்லோரும் சோகமாக இருந்தபோது ரமணி Vs ரமணி  தொடரை இணையத்தில் வெளியிட, அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போது தான் இதை மீண்டும் உருவாக்கலாம் என தோன்றியது. தமிழுக்கு புதிதாக வந்திருக்கும் ஆஹா பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாலாஜி மோகன் பேசுகையில், “ஆஹா இந்த நாளுக்காக உழைத்தது எனக்கு தெரியும். கடந்த சில மாதங்களாக அல்லு அர்விந்த் சாருடன் பழகும் அனுபவம் கிடைத்தது. நிறைய ஆச்சரயங்கள் கிடைத்தது. அவர் இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கேற்றவாறு நவீனமாக இருக்கிறார். நாங்கள் ஆஹா வில் ஒரு ஷோ செய்துள்ளோம். இப்போது தான் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியாவில் ஆஹா  மட்டுமே மொழி சார்ந்து இயங்கும் தளமாக இருக்கிறது ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

கார்த்தி நடிப்பில்  உருவாகியுள்ள ‘சர்தார்’ படத்தை ஆஹா ஸ்ட்ரிமிங்  செய்யவுள்ள தகவலை அல்லு அர்விந்த் ஸ்பெஷலாக  அறிவித்தார்.