‘96’ படத்தின் கதை என்னுடையது தான்: இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘96’. இப்படத்தின் கதை தன்னுடையது என்றும், தன் கதைக்கு ‘92’ என தான் பெயர் வைத்திருந்ததாகவும் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குனர் மணிவில்லன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

n2

இயக்குனர் பிரேம்குமார் பேசுகையில், “96’ படத்தின் கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குனர் பாலாஜி தரணீதரனிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்குப்பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அந்த விவாதத்தில் இயக்குனர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.

இந்த படத்தின் டைட்டில் ‘96’ என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை பல முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.

படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து, விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் ‘இந்த கதை என்னுடையது’ என்றும், ‘இயக்குனர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன்’ என்றும், ‘அவர் தான் இந்த கதையை இயக்குனர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது’ என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார். ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்?

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘அசுரவதம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.

n3

இந்த கதையை முதல்முறையாக நான் எழுதிய குறிப்பேடும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன்பின்னர் தான் இந்த கதையைப் பற்றி இயக்குனர் மருது பாண்டியனிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர், ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் ‘92’ என்ற டைட்டிலில கதை சொல்லி தான் கேட்டதாகச் சொல்லவே இல்லை. கதை விவாத்தின்போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கச் சொல்ல வேண்டும்?

இந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதைக்களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதைக்களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம். இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா?

இது போன்ற பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குனர் கே.பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம். அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா?

இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012ஆம் ஆண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்பக் குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்களை அவர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கதைத் திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும்போது, தன்னுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இதுவரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத்தன்மை கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரிய வருகிறது” என்றார் இயக்குனர் பிரேம்குமார்.

உதவி இயக்குநர் மணிவில்லன் என்பவர் பேசுகையில், “சுரேஷ் என்பவர் மருது பாண்டியனிடம் ‘92’ என்ற கதையைச் சொல்லும்போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது. அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு” என்றார்.