இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் – ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு  காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் – “படித்தவுடன் கிழித்துவிடவும்”. அந்த வசனத்தையே தலைப்பாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்திருப்பவர் ஆர்.உஷா.

கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக எஸ்.எம்.டி.கருணாநிதி அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் செ.ஹரிஉத்ரா.  இவர் ஏற்கனவே மீதேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து ‘தெரு நாய்கள்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படம் பற்றி இயக்குனர் செ.ஹரிஉத்ரா கூறுகையில், “இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களைச் செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குக்கூட செய்கிறோமே இன்சூரன்ஸ்  அதுதான். அதைப் பற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’. இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்பந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளது.

அப்படி ஒரு அரசியல்வாதி இன்சூரன்ஸ் மோசடி செய்கிறார். அவரை இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி பழிவாங்குகின்றன என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக  திரைக்கதை அமைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ரெட் ஹீலியம் என்ற புது வகையான  கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது. படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

ஒளிப்பதிவு   –        வாசு

இசை            –        நிரோ பிரபாகரன்

பாடல்கள்     –        மாஷா சகோதரிகள், அபிநந்தன்

கலை            –        இன்ப ஆர்ட் பிரகாஷ்

சண்டை       –        ஸ்டன்ட் கோட்டி

எடிட்டிங்     –        முத்து முனியசாமி

மக்கள் தொடர்பு  –          மணவை புவன்

இணைத் தயாரிப்பு –  சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர்