“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது!” – விவேக்

‘ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் திசை மாறி செல்வதாகவும், ஆதலால் இப்போராட்டத்திலிருந்து தாம் விலகிக்கொள்வதாகவும் திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக், “ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது. உலகமே நம் மாணவர்களின் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது. அதற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று. தனிநபரை கொச்சைப்படுத்தும் கோஷங்கள், தேசியக்கொடி அவமதிப்பு போன்றவை நிகழக் கூடாது. நிதானம் அவசியம். என் போல நீங்கள் அனைவரும் கலாமின் சீடர்கள். இப்போது அவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார்? யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே!” என்று கூறியுள்ளார்.