ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம்: சசிகலா அணி அதிர்ச்சி!

திமுக அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீண் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் நேற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், “ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பத்மஜா தேவி ஏற்கனவே கடந்த 2016ல் நடந்த பொது தேர்தலில் இதே தொகுதியில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். தற்போதும் இவர் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

ஆளும் கட்சியினர் அத்துமீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகியவை குறித்து இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை.

இதனால் தற்போது இந்த முறையும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே பத்மஜாவை தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டு அவருக்கு பதிலாக மத்திய அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியின் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக பிரவீண் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஆளும் சசிகலா அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.