ஜெயலலிதா உடல்நிலை: தமிழக அரசை விளாசியது சென்னை உயர்நீதிமன்றம்!

வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அந்த மாநில அரசின் கடமை” என்று தமிழக அரசை விளாசியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து நீதிபதிகள் எம்.என்.சுந்தரேசன், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மனுதாரர் டிராபிக் ராமசாமி, “தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரிய எனது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை” என்றார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீமணி சங்கர், “தனிப்பட்ட உரிமை என்ற ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அந்த மாநில அரசின் கடமை. அவ்வாறு தெரியப்படுத்துவதில் தவறில்லை” என்றனர்.

மீண்டும் குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், “முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “தனியார் மருத்துவமனையின் அறிக்கை வெளியிடப்பட்டாலும் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பது கடமையாகும்” என்றனர்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அரசிடம் ஆலோசித்து விளக்கமளிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

வழக்கு விசாரணை நாளை மறுநாள் (06.10.2016) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.