ஜெயலலிதா காலமானதாக தகவல்: அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி; அப்போலோ மறுப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர்.

அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்தனர். அப்போலோ மருத்துவமனை முன்பு விடிய விடிய காத்து நின்ற தொண்டர்கள், முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். அதேசமயம் மருத்துவமனை மட்டுமின்றி சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் விடுப்பு எதுவும் எடுக்காமல் காலையில் பணிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். தற்காலிக முதல் மந்திரியாக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று பிற்பகல் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்தது. இதனால், அப்போலோ வாசலில் கூடியிருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதேசமயம், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே வெளியிட்ட அறிக்கையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் தொண்டர்களின் கவலை மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், இன்று மாலை 5.15 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக தகவல் வெளியானதால்,  அப்போலோ மருத்துவமனை அருகே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு அப்போலோ மருத்துவமனைக்குள் செல்லவும் அவர்கள் முயற்சித்ததால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோவின் புதிய அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து சென்னை விரைந்து வந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.