தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அம்மாநில முதல்வரும்,  காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதி:

இங்கு 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

திருப்பரங்குன்றம் தொகுதி:

இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 1,12,988 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் 70,361 வாக்குகள் பெற்றுள்ளார். 42,627 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அரவக்குறிச்சி தொகுதி:

இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜி 88,068 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமி 64,395 வாக்குகளும் பெற்றுள்ளார்கள்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி:

இங்கு காங்கிரஸ் வேட்பாளரும், புதுவை முதல்வருமான நாராயணசாமி, 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 18,709. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7565 வாக்குகள் பெற்றார்.