“நோட்டு உத்தியால் மக்கள் அவதி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 24ஆம் தேதி மனித சங்கிலி!” – கருணாநிதி

திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கை:-

மத்திய பா.ஜ.க. அரசு, “அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி” என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை.

ஏழையெளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் “கியூ”வில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை. வியாபாரிகள் எந்தவிதமான வியாபாரமும் இல்லாமல் தங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கின்றனர்.

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை.

மற்ற மாநில முதல்வர்கள் இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும்.

இந்த மாபெரும் மனிதச் சங்கிலியில் கழகத் தோழர்களும், கட்சி சார்பற்ற பொது மக்களும், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.